Saturday, 17 July 2010

மன்றாட்டம்...


தாராயோ தங்க நிறம்
தயவாய்க் கேட்கிறேன்;
சீராகும் என் நிறமும் ஒரு
சிட்டிகை தந்திட்டால்...


எனது தங்க மீன்கள், அவ்வப்போது நிழல்ப்படக்கருவியுடன் நீண்ட நேரம் அவற்றிற்கு முன்னாலிருந்து அவை செய்யும் குறும்புகளையும் அவை தரும் கண்ணுக்குக் கவர்ச்சியான நிலைகளையும் (pose) படமாகப் பிடித்து வைப்பேன். இந்த நிலை அவற்றில் ஒன்று.

இந்த இரண்டு மீன்களுக்குமிடையில் ஏதோ சண்டையோ.. என்னவோ...

ஆனால், அவை நின்ற விதத்தைப் பார்க்கும் போது, எனக்கு வீட்டில் நாங்கள் ஒருவர் பொருளை ஒருவர் எடுத்துப் பாவிப்பதற்கு மன்றாடுவோம், போராடுவோம், தாஜா பண்ணுவோம்... எவ்வளவோ நடக்கும் எங்களது வீட்டில்... 
அது ஞாபகம் வரவே அவற்றின் நிலையை வைத்து இப்படி எழுதினேன்...

சுஜி...

இன்னும் பல எனது தங்க மீன் படங்களின் தொகுப்பு இந்த 'யூற்றியுப்'இலுள்ளது.
இணைப்பை க்ளிக் செய்து பாருங்கள்





Wednesday, 14 July 2010

மொழியும் நானும் -1- சீனி வாங்கப் போனவள்...

ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத ஒரு அந்நிய நாட்டுக்கு நாம் ஒருவரைத் திருமணம் செய்து சென்றோமானால்; முதலில் நடைமுறைத் தேவைகளுக்கு மொழியைத் தெரிந்து கொளவது அவசிமாகிறது.

நண்பர்கள் இருவர் பகிர்ந்து கொண்ட உண்மைச் சம்பவங்களே இதற்குச் சான்று.

இப்போது அனேகமாக எல்லா நாடுகளிலும் பல சரக்குக் கடைகள், நம் நாட்டுப் பெட்டிக்கடைகள் போலுள்ள மிகச் சிறிய கடைகள் எல்லாவற்றிலும்  நாமே கடைக்குள் சென்று, எமக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்து விலை போடுவோரிடம் விலை போட்டு பணத்தைச் செலுத்தும்முறை வந்துவிட்டது.

இதற்கு இந்நாட்டு மொழியை நன்கு கற்றுத்தெரியவேண்டியதில்லை.  பொருட்கள் பொதி செய்யப்பட்டு, உரிய படங்கள், விளக்கங்கள்  போன்றவற்றை பொதி உறையில் அச்சிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் சில பொருட்களுக்கு உதவியை நாட வேண்டியது அவசியம்.

‘சீனி’(sugar)யையும் ‘உப்பு’(salt)வையும் ஒரு மொழி தெரியாதவர் - ஆங்கிலமேனும் தெரியாதவர் - கொள்வனவு செய்வது கடினம்.

இங்கே பிற நாடுகளிலிருந்து வருவோருக்கு மொழிக் கல்வியும் நடைமுறை வழக்கங்களும் முதலில் சொல்லிக் கொடுப்பார்கள்... மொழிக்கல்வி ஆகக் குறைந்தது 500 மணித்தியாலம் பயின்றேயாக வேண்டும். மொழிக்கல்வி பயின்றோருக்கு எந்த வித சிக்கலுமில்லை.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி எப்போதுமே உதவி செய்வார்.

‘அப்புறம் என்ன கடினம் என்று கேட்கிறீர்களா...?’
ஆம் அவர்களுக்கு ஒரு கடினமுமில்லைத்தான், ஆனால் அவர்கள் திருமணம் செய்து துணைவியரை அழைத்தால், அந்தத் துணைவியர் விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றிருந்தது ஏறத் தாழ நான்கு ஐந்து வருடங்கள் வரையில். இன்று புதிதாக வரும் எல்லோருமே இந்நாட்டு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்கலாம் என்றிருந்த காலத்தில் வந்த எமது தமிழ் பெணகளெல்லாம் மொழி கற்காமலேயே இருந்திருக்கிறார்கள்.

இனிப்பான ஒரு உதாரணம்:

ஒரு நண்பர் தனது புது மனைவிக்கு எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிவிட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார்.

- அநேகமானோருக்கு அவர்களது துணைவியர் தாமதமாகவே வந்து சேர்வர். இது குடிவரவு குடியல்வுத் திணைக்களங்களால் ஏற்படும் கால தாமதமாகும். ஆனால் திருமணம் செய்து அழைத்தவர்களோ ஒரு நாள் விடுமுறைகூட எடுக்க முடியாத நிலையிலிருப்பர்.

சந்தோஷமாகக் கழியும் நாட்களில் புது மணத்தம்பதிக்கு நடைமுறையிலுள்ள சிக்கல்கள் கண்ணுக்குப் புலப்படுமா..?! இல்லை!!-

வீட்டில் தனியே தமிழ் படம் (video tape) பார்த்துக் கொண்டிருந்த அந்தப் புதுப்பெண், தேநீர் தயாரிக்கலானார். நல்லவேளை அவளது புதுக் கணவர் கோப்பிப் பொடியும் (instant coffee. - not filter coffee -) தேயிலையும் (tea leaves - not tea bags-) வாங்கி வைத்திருந்தார். ஆனால் சீனியிருக்கும் ஒரு சாடியுள் சீனி இருக்கவில்லை. சீனி தீர்ந்து விட்டது அல்லது சீனி முடிந்து விட்டது. புதுப் பெண்ணுக்கு அவளது கணவர் எற்கனவே அவர்கள் குடியிருந்த அடுக்குமாடி வீடுகளின் நிலத்தளத்திலுள்ள கடைகளைக் காட்டியுள்ளார். மனத் தெம்புடன் கடைக்குச் சென்றாள் அந்தப் புதுப் பெண்.

கடைக்குள் ஒவ்வொரு அடுக்குகளாகத் தேடிக் கடைசியில் ஓர் அடுக்கில் ஒரு பெட்டியை எடுத்து குலுக்கிப் பார்த்தபோது, (சீனிப் பொதி இறுக்கமாக இருக்கும் குலுங்காது) அது சீனிச் சரையில் சீனி சரசரப்பது போல இருந்தது அந்தப் புதுப் பெண்ணுக்கு.
சீனி தின்ற குழந்தையைப் போலொரு சந்தோஷத்தோடு பணத்தைக் கொடுத்து மிகுதியையும் வாங்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தாள்.

ஒரு நிமிடங்கூட தாமதிக்காது பெட்டியை பிரித்து உள்ளே தேநீர்க் கரண்டியை நுழைத்து இரண்டு கரண்டிக்குப் பதில் மூன்று கரண்டி சீனிப்பழிங்குகளை தேநீருள் போடடு கலக்கிக் கொண்டு ‘அப்பாடா’ என தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே அமர்ந்தாள்.

சந்திரனில் முதன்முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) இற்கு அப்படியொரு சந்தோஷம், உற்சாகம், மன நிறைவு, பெருமிதம் இருந்ததோ இல்லையோ அவளுக்கு இருந்தது.

தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த தமிழ்ப்படத்தைப் பார்த்துக்கொண்டே தேநீர்க் கோப்பையை வாயில் வைத்து  ஒருதரம் உறிஞ்சி சுவைத்தாள்.

வாய்க்குள் வந்த தேநீரை வெளியே உடனே துப்பவேண்டும் போலிருந்தது. ஓடிச்சென்று குளியலறையில் துப்பி வாயைக் குளிர் நீரால் கொப்பளித்துவிட்டு வந்தாள். தேநீர் ஒரே உப்பாக இருந்தது அவளுக்கு. அவளால் நம்ப முடியவில்லை...

சமையலறையில் தான் வாங்கிவந்த அந்தச் சீனிப் பெட்டியில் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப்போட்டுப்பார்த்தாள். அதுவும் உப்புச் சுவையைத் தந்தது. மீண்டும் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப் போட்டுச் சுவைத்துப்பார்த்தாள். எத்தனை தடவை ஒரே பெட்டியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் உப்பு சீனியாகுமா...? அதன் பின்னர்தான் அவள் உணர்ந்தாள் தான் வாங்கிவந்தது சீனியல்ல, உப்பு என.

பின்னர்தான் அவள் அந்தப் பெட்டியில் எழுதியிருந்ததைப் பார்த்தாள் அது ஆங்கிலமாகவே இருந்தது, உப்பு என எழுதியிருந்தது.

பின்னர் புதுக் கணவரின் புத்தக அடுக்கில் இருந்த ஆங்கிலம் - நோர்வேஜியன் மொழி அகரதியில் சீனிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் எனப்பார்த்து (sukker) அதை அப்படியே ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொண்டு சென்று கடையில் சீனியை வாங்கி வந்தாள்.

முதலில் ஒரு சிட்டிகை வாயில்ப் போட்டுப்பார்த்து அது சீனிதான் என உறுதி செய்த பின் தேநீரில் போட்டுக் குடித்தாளாம்.

கணவர் வந்ததும் அதைச் சொல்லி அவள் சிரித்தாள், ஆனால் அவளது கணவர் தான் செய்த தவறை யோசித்து உடனேயே தன் புது மனைவிக்கு இந்நாட்டு மொழி கற்பித்தாராம்.

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பர் ஆனால் தேநீருக்குச் சீனிதானே சுவை சேர்க்கும்

Thursday, 8 July 2010

அன்னம் இரண்டு...


அழகான அன்னம் இரண்டு,
அசையாத நீரோ ஒன்று;
பழகிய முறையோ பண்பு,
பருகிய காதல் கண்டு,
இழகிய மனமும் ஒன்று;
இயற்கையின் அது பண்பு,
சிந்தையும் கவர்ந்தது இன்று...

Friday, 2 July 2010

இன்பவடு...

இன்பவடு இதயத்தில் நினைவுகள்
இரத்தத்தில் சிவப்பணு;

இதயத் துடிப்பலைகள்
இமயத்தையும் கடந்திடும்;

இதய இன்ப வடுவோ
துடிப் படங்கும் வரை;
உடற் கூறு ஓடி யாட
இதயம் வலி தாங்கும்;

எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒன்று நெருடும்;

காலக் கோலங்களில்
அடிபட்டுப் போகும்
அகல விரியும்
ஆழ்கடல் பிரிக்கும்
ஆனாலும்
இன்ப வடு
வருட வருட
தரும் சுகமே
ஆயுள் வரைக்கும்...

Thursday, 1 July 2010

உன் பெயர் சொல்ல ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை

நேற்றுச் சொன்ன பெயரை
இன்று சொல்ல ஆசை;
நேரில் வந்து நின்று
நேசம் சொல்ல ஆசை - உன்

கண்ணிமைக்கு முன்னே
காதில் சொல்ல ஆசை;
எண்ண மதில் என்ன
என்று சொல்ல ஆசை - அதை

உன்னை மட்டும் அருகில்
அழைத்துச் சொல்ல ஆசை;
உன்னிடம் சொல்லி
நாண வைக்க ஆசை - உன்

கண்களைக் கண்டு
கவிதை சொல்ல ஆசை;
கனவினில் வந்து
கலகம் செய்ய ஆசை - வேறு

பெண்களைக் கண்டால்
விலகிச் செல்ல ஆசை;
உன்னை மட்டும் கட்டி
அணைத்துக் கொள்ள ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை...

மெதுவாகத் தோழ்களில்
சாய்ந்து கொள்ள ஆசை;
இதமாக கால்களை
வருடி விட ஆசை - நீ

கண் விழிக்கும் வரையில்
கண் விழித்திருக்க ஆசை;
கன்னத்தில் கோலமிட்டு
சிவக்க வைக்க ஆசை - அதி

காலையில் எழுந்துனது
கேசம் கோதி விட ஆசை
மாலையில் மடியிருத்தி
பாட்டிசைக்க ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 11.07.2005 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

Tuesday, 29 June 2010

செய்யாதது...

இன்று பல தடவை பார்த்த The Big Bang Theory என்ற தொடரில் ஒரு பாகம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஷெல்டன் கூப்பர் என்ற பௌதிக வியலாளர் ஒரு முறை ராஜ் என்ற விண்வியலாளரின் அலுவலகம் சென்றார். ராஜின் அலுவலகத்திற்கு சென்ற ஷெல்டன்;  பத்து நிமிடத்தில் ஒரு programmஐ எழுதினார். அந்தப் programm தானாகவே ராஜ் என்பவரது முழு வேலையையும் செய்து முடிக்கக் கூடியதாக அமைந்தது. ஆனால்  ஷெல்டனை தந்திரமாக வெளியே அனுப்பித் தன் வேலை தக்க வைத்துக் கொண்டார் ராஜ். எனக் கதை செல்கிறது...
(லெயொனார்ட், ஷெல்டன், ராஜேஷ், ஹவார்ட் ((Leonard, Sheldon, Howard and Rajesh) அனைவரும் ஒரே பல்கலைக்களகத்தில் வேலை பார்ப்பவர்கள். மூவர் தத்தம் துறையில் கலாநிதி பட்டம் பெற்றோர், ஹவார்ட் பொறியியலாளர்...  இவர்களோடு Penny என்ற அழகிய நங்கையும். Penny என்பவள் பௌதிகம் என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்கக்கூடியவள், ஒரு சிற்றுண்டிச்சாலையில் வேலை பார்ப்பவள், ஆனால் தனது அழகினால் அனைவரையும் ஆட்டி வைப்பவள். லெயொனார்ட், ஷெல்டன் குடியிருக்கும் அடுக்குமாடியில் குடியிருப்பவள்).

அந்தக்காட்சி எனது நினைவுகளில் ஒரு சம்பவத்தை அலைமோத வைத்தது...

ஒரு நாள் நான் எனது மோட்டார் வாகனத்தை (car) நிறுத்துவதற்கு இடம் தேடி அலைந்து கடைசியாக அரை மணி நேரத்தின் பின் அந்த இடம் கிடைத்த நிம்மதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு கட்டணம் செலுத்துவதற்காக நாணயக் குற்றி தேடினால் கிடைக்கவில்லை... பின்னர் கடை, கடையாக ஏறி காசை மாற்றிக் கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது.
அதுவும் பனியில் வழுக்கி வழுக்கி நடந்த களைப்பே எனக்கு சினமூட்டியது... நல்லவேளை வாகனத்தரிப்பிட மேற்பார்வையாளர் வரவில்லை, அபராதச் சீட்டெதுவும் வாகன முகப்புக் கண்ணாடியில் இருக்கவில்லை...
ஒரு மாற்று முறை காணமுடியாதா என என் யோசனை சென்றது... 

மறுநாள் ஒரு வழிமுறையை யோசித்து அதற்கான வரைபடங்கள், செய்முறை எல்லாவற்றையும் எழுதி ஓர் உறையிலிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எனது உத்தியை அஞ்சலில் அனுப்புவதற்காக அஞ்சலகம் சென்றேன்.

அஞ்சலகம் சொற்ப தூரத்திலிருப்பதால் நான் நடந்தே செல்வது வழக்கம். அன்றும் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை, அங்கே ஒரு வாகனத்தரிப்பிடத்தில் தடித்த குளிருடையோடு ஒருவர் வாகனங்களை பார்த்து கட்டணம் செலுத்ததாமல் நிறுத்தியிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் எழுதிக் கொண்டிருந்தார்.

எனது நடையில் சிறிது தளர்வு எற்பட்டது... சிந்தனை வேறு விதமாகச் சென்றது. நான் பிரேரிக்கும் முறையை, யோசனையை சம்பந்தப்பட்ட அலுவலகம் ஏற்றுக் கொள்ளும் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர்கள் அப்படி எனது யோசனையை ஏற்றுக்கொண்டால், இவர்களுக்கெல்லாம் வேலையில்லாமல்லல்வா போய்விடும் என்ற சிந்தனை என்னுள் வளர ஆரம்பித்தது. ஆயிரத்துக்கும் மேலானோர் வேலையில்லாது வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை வந்துவிடும். எனது இந்த யோசனையால் ஸ்தாபனங்கள்தான் பணம் திரட்டும்.

அஞ்சலகம் செல்வதற்கு பதிலாக, ஒரு கோப்பிக் கடையுள் நுழைந்தேன்.  கோப்பியை அருந்திக் கொண்டு யோசிக்கலானேன். நான் செய்யாவிட்டால் இன்னொருவன் அதை யோசித்து செய்யப்போகிறான். எனவும் ஒரு குரல் என்னுள் கேட்டது. இன்னொருவன் அதைச் செய்தால் செய்யட்டும் நான் செய்யக்கூடாது... என ஒரு உறுதியோடு கடைசித்துளி கோப்பியை ஆனந்தமாக உறிஞ்சிக் குடித்துவிட்டு அந்தக் கடித உறையோடு வீடு திரும்பினேன்.

இன்று பத்து வருடங்களாக எனது வாகனத்தை வாகனத்தரிப்பில் நிறுத்துவதும் நணயக் குற்றியில்லாது பனியில் வழுக்கி விழுந்து, வழுக்கி விழுந்து ஓடிச்சென்று கடையில் காசை மாற்றிக் கொண்டு வந்து தரிப்புக் கட்டணம் செலுத்துவதும் வழமையாகிவிட்டது.  அதில் ஒரு சினமும் இல்லை, வேதனையும் இல்லை, ஒரு சிரமும் தெரியவில்லை,  மாறாக ஒரு திருப்தி உணர்ச்சி உள்ளத்தில் எழுகிறது.

ஆயிரமாயிரம் வாகனத் தரிப்பிட மேற்பார்வையாளருக்கு வேலை தந்தாற்போலொரு பெருமிதம் என்னுள்.

அவர்களை வாகனத்தரிப்பிடத்தில் பார்க்கும் போது ஏனோ என்னையறியாத ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது.

Wednesday, 2 June 2010

நட்பும் இழப்பும்...

நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது, அது சுகமானதாகவே இருக்கும். சில நேரம்  கண்களில் நீரைச் சில வரவழைத்தாலும்; அதுவும் ஒரு ஆறுதலாக இருக்கும். இப்படிப்பட்ட சுகமான, சுவையான, வேதனையான நினைவுகள் இந்தப் புவியில் பிறந்த எல்லோருக்குமே இருக்கும்.

எனது நண்பர் ஒருவர் சொன்னது இது. அது அவரது வாழ்க்கையில் ஒரு சிறு துளி என்றே சொன்னார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் சிறு துளியோ பெரு வெள்ளமோ அவரது  இழப்புகளில் இதுவும் ஒன்று என்றே தான் நான் கூறுவேன்.
அவரது பெயரை இங்கே குறிப்பிடவா எனக் கேட்ட போது, தனது பெயரை மட்டும் குறிப்பிடுவதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.

அதாவது ஒருவரது நினைவுகள்; அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட பலருடைய சந்திப்புகளால் வந்த அனுபவங்களாகவும் இருக்கலாம்.
அவற்றை இணையத்திலோ அல்லது எந்த இடத்திலோ குறிப்பிடும் போது அடுத்தவருடைய மன நிலையோ அல்லது வாழ்க்கையோ எமது குறிப்புகளோ எழுத்துக்களோ பாதிக்காத வண்ணம் நாம் பார்த்துக் கொள்வது அழகல்லவா...
அதனாலேயே அவர் அப்படி என்னிடம் வேண்டிக் கொண்டார்.

இந்த முன்னுரை இனிவரும் பதிவுகளில் நான் எழுதி இந்தப் பதிவேட்டை வாசிக்கும் உங்களை சலிப்படைய வைக்கப்போவதில்லை.
அவரது பெயர் இறஞ்சன்.

சரி... சரி... அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற அந்தச் சிறு துளியை அந்த நண்பர் சொல்வதாகவே இங்கே எழுதி வைக்கிறேன்....

இன்றைக்கு சரியாக 15 வருடங்களுக்கு முன் நான் வடக்கிலுள்ள மகாணங்களில் லொடிங்கன் என்ற இடத்தில் இருந்தேன்.
அப்போது ஒரு அண்ணனும் அவனது தங்கையும் எனக்கு பழக்கமாயினர்.

முதலில் நாம் நண்பர்களாகவே பழகி வந்தோம்.

என்ன தேவையென்றாலும் அவள் தனது சொந்த அண்ணனுக்கு பின் என்னைத்தான் அழைப்பாள். வேலைக்குச் செல்வதென்றால்; அந்த இடத்தில் பனி காலத்தில் நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும். காலையிலோ மாலையிலோ அவளது அண்ணன் இல்லையென்றாலோ அல்லது அவன் களைப்பாக இருக்கிறானென்றாலோ உடனே தொலைபேசியில் என்னை அழைத்து எனது மோட்டார் வாகனத்தில் (car)செல்வது முதலில் ஆரம்பமாக இருந்தது.

என் மீது நம்பிக்கை வளர வளர நான் அவர்களது நெருங்கிய நண்பனானேன். அவர்களது வீட்டில் (apartment) உண்பது உறங்குவது அவர்களோடு தூர இடங்களுக்குச் செல்வது, அதிகமாகக் car பயணம் செய்வது Swedenக்குத்தான்.
Swedenக்கு, Norway நாட்டவருங்கூட செல்வதேனென்றால் அங்கே பொருட்களை மலிவாகக் கொள்வனவு செய்யலாம்.

அதனாலேயே நாமும் மாதம் இருமுறை Swedenக்குச் சென்று பொருட்கள் வாங்குவது வழமை.

எங்களுடைய நட்பு;  நட்பு என்ற நிலையிலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை அறியாமலே வளர்ந்து கொண்டிருந்தது. 

 இதை எப்படி அறிந்தேன் எனச் சொல்வதற்கு முன் எனது உணவு வழக்கத்தை கூறிவிடுகிறேன்.

எனக்கு ஒரு நேரம் உணவு உண்டால் அதுவே போதும் அன்றைக்கு என்பவன்.  அது அனேகமாக மாலைநேர உணவாக இருக்கும். இது இலங்கையிலிருந்து வந்த பழக்கம். ஒரு கோப்பை கோப்பி எப்போதுமே போதுமானதாக இருக்கும்.

ஆனால் அவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் பசித்துப் புசிப்பவார்கள். அனேகமாக மற்றவர் உணவருந்தும் போது நான் கோப்பி அருந்துவேன்.
எங்களது நட்பு;  நட்பு என்ற நிலையிலிருந்து அடுத்த பரிமாணம் எடுக்க ஆரம்பித்து இங்கேதான்...

ஓரிரு வருடங்களுக்குப் பின் அவள் என்னையும் தங்களுடன் உணவு உண்ணும்படி வற்புறுத்துவாள். அதிலும் ஒரு வித்தியாசத்தையும் நான் அறிய கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த வற்புறுத்தலில் ஒரு அதிகாரம் இருந்தது.

எனக்குப் பசித்தாலும்; எனக்கு உணவை உண்ண வேண்டும் என நான் நினைத்தால்த்தான் நான் உணவு உண்ணச் சம்மதிப்பேன். எனது முக பாவனையிலோ அல்லது கதைக்கும் முறையிலோ எவரும் நான் பசியோடு இருப்பதை அறிந்து கொள்ளமாட்டார்கள். அப்படி ஒரு அமைப்பு எனக்கு.

 உணவு உண்ண அழைக்கும் போது, முதலில் அவள்
 "றஞ்சண்ணா சாப்பிடுங்கோ" என்றாள்.

அந்தப் பதக்கோர்வை போய் "சாப்பிடச் சொன்னா சாப்பிட வேண்டியதுதானே..." என்பாள்.

அந்த வார்த்தைக் கோர்வைகளெல்லாம் சில நாட்களில் கரைந்து போய்விட்டது.

 ஆனால் மற்றவர்களுக்கு முன்னால் என்னை வெகு அழகாகவும் மரியாதையாகவும் "நீங்கள் என்னமாதிரி சாப்பிடூறீங்களே...?" என கேட்பாள் நான் முடியாது என்றால் ஒரு சோகப்பார்வையுடன் மறு வார்த்தை பேசாது விட்டுவிடுவாள்.

நான் தனியே அகப்பட்டேனெறால் ஏதாவது இருப்பதை உண்ண வைக்காமல் விடமாட்டாள். அதுவும் இப்படித்தான் அந்த அன்பான அதட்டல் இருக்கும்:

"வாங்கோ சாப்பிடுவம்" என்பாள்; அதற்கு முன்னதாகவே அவளது அண்ணன் சாப்பாட்டு மேசையருகே அமர்ந்து விடுவான். ஆனால் நான் செல்ல வில்லை என்றால் இப்படித்தான் சொல்லுவாள்:
 "இனி 'டா' போட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கும்"

அதற்கு நான் "எங்கே ஒருக்கா சொல்லித்தான் பாருங்களேன் யார் வேண்டாமெண்டது " என்பேன். பின்னர் ஏதோ ஒரு விதமாக அவள் என்னைச் சாப்பிட வைத்து விடுவாள்.

ஒருமுறை அவளது அண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டான். அப்போது நான் அகப்பட்டுக்கொண்டேன். அன்றும் எனது வழமையான மறுத்தலுக்கு அவளிடமிருந்து வந்தவை:" டேய் எழும்படா சாப்பிட வாடா" என்றாள். ஆனால் ஒரு அன்பான பார்வையோடும், அழகான சிரிப்போடும். குழந்தைத் தனமான குரலில் வார்த்தைகளை செல்லமாக உச்சரித்தாள்.
அந்த முக பாவனையோ 'என்னை இப்படிச் சொல்ல வைக்கிறாயே இது கடவுளுக்கே ஏற்காது' என்பது போல இருந்தது.

"இதுக்கும் நான் அசையேல்ல எண்டா அடியே விழுந்திடும்" என்றேன்.
"நல்ல 'மொப்' போடூற கொட்டன் கிடக்கு வேணுமே நாலு" என்றாள்.
இப்போதும் அந்தக் குறைவில்லாச் சிரிப்போடும் நிறைந்த அன்போடும்தான் அந்த வார்த்தைகள் அவளிடமிருந்து வெளிவந்தன.

அப்படி அவள் கதைக்கும் போதெல்லாம் 'இன்னும் நான்கு முறை அப்படிக் கதைக்க மாட்டாயா' என என் மனம் ஏங்கும்...

பின்னரெல்லாம் அவள் சரளமாக என்னுடன் கதைக்கும்போது, இந்த 'டா' இடையிடையே வந்து விழும்.
ஆனால் மரியாதை வார்த்தைகளை பிரதிபலிக்கத் தொக்கு நிற்கும் பதங்களான 'ங்கோ' 'ங்கள்' என்பன மறைந்து போகவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அவள் என்னிடம் மரியதைக் குறைவாக என்றுமே நடக்க அல்லது கதைக்க முற்பட்டதே இல்லை.
அவள் வேண்டுமென்றே என்னுடன் 'டா' என்று சொல்லிக் கதைக்கிறாள் என்பது அவளது முகம் காட்டித் தந்துவிடும்.
ஆனால் இதெல்லாம் அந்தப்பரிமாண வளர்ச்சியில் முதுமையடையாத முதல்ப்பக்கங்களே...

ஒருநாள் நான் கோப்பியுடன் ஒரு சிகரட்டைப் பற்றினேன்.
நான் சிகரட் பற்றும் வேளை முழுவதையும் ஒரே தரமாக இழுத்து முடிப்பதில்லை. அணைத்து வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து புகைப்பேன்.

அன்றும் நான் சிகரட்டை அணைத்து விட்டு அவளுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, அவள் அந்த அணைத்த துண்டத்தை எடுத்து தனது வாயில் வைத்து தீக்குச்சியின் நெருப்பினால் அதைப் பற்றவைக்க முயன்றாள்.
அப்படி அவள் முயன்றபோது, புகை புரையேறி மூச்செடுக்கச் சிரமபட்டாள். இருமிய இருமலில் உள்ளே சென்ற புகை மூக்கினாலும் வாயினாலும் வெளிவந்தது. எனக்கு அவளைப்பார்க்கவே பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.

அப்போதுதான் எங்களது நட்பு அடுத்த பரிணமத்தை முழுமையா அடைந்துவிட்டதை உணர்ந்தேன். வேடிக்கை விளையாட்டாக கதைப்போம், சிரிப்போம், ஆளுக்கு ஆள் அதட்டுவோம்; ஆனால் இன்று நடந்தது மிகை என்றே எனக்குத் தோன்றியது.

"ஏனடீ நீயெல்லாம் சிகரெட் குடிக்க ஆசைப்படூறாய்" என அங்கலய்த்தவனாகக் கேட்டேன். ஆம் அன்று 'டி' என்று சொல்லித்தான் கேட்டேன்; காரணம் அந்த அளவுக்கு எனக்கு வேதனையாக இருந்தது அவளை பார்த்து போது, அதனால் என்னையறியாமலே அந்த 'டீ' வந்து விட்டது. ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அதற்கு அவள் வடிந்த கண்ணீருடனும் சிறிய விம்மலுடனும் "நான் உங்களோட இருக்கிறதெண்டா எதையும் பழகித்தானே ஆக வேண்டும்" என்றாள்.

"OK என்னோட இருக்கிறதெண்டால் ஒரு நல்ல பழக்கத்தைப் பழகலாம் ஆனா சிகரெட் குடிக்க ஏன் பழக வேணும்?" என்றேன்.
ஆனால்; என்னுள் 'என்ன்ன்ன என்னோட இருக்க்க்கிறதெண்டாலோ... அதென்ன கதை எனக்கு விளங்கேல்லையே...' என என் மனம் எனக்குள் விடை தேடிக் குடைந்து கொண்டிருந்தது.

அதற்கு அவள் "பிழைதான் ஆனா இதுவும் உங்களுக்காகத்தான்" என்றாள்.

மீண்டும் என் மனதைக் குடைந்த கேள்விக்கு உரம் போட்டாற் போல ஒரு வார்த்தைக் கோர்வை. சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு அவள் முன்னரெல்லாம் கூறுவது போல 'மொப்' போடும் கட்டையால் அடித்தது போல இருந்தது. நான் எனக்குள் 'இதிலும் பார்க்க நீ எனக்கு நாலு அடி போடலாம் அந்த வலி மிகவும் குறைவாக இருந்திருக்கும்' என்று சொல்லிக் கொண்டேன்.

ஆனால் அவளுக்கு நான் சொன்னது:

"அது சொல்லாமலே தெரியுதே..." என்றுவிட்டு அந்த சாம்பல்த்தட்டை எடுத்து வெளியே எறிந்துவிட்டு வந்தேன்.
"அப்ப இனி சிகரெட் குடிக்க மாட்டீங்களே" என்றாள் மிகுந்த ஆவலுடன்.
"உங்களுக்கு முன்னால குடிக்க மாட்டன்" என்றேன்.
"கள்ளா நான் விடமாட்டன்" என்றாள்.
"நான் வகையா மாட்டுப்பட்டுப்போனன்" என்றேன்.
ஒரு நாணப் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு இன்னொரு கோப்பை கோப்பியை என்னிடம் நீட்டினாள்.
அதன்பின் அவர்களது வீட்டில் நான் புகைப்பதே இல்லை.

ஆனால் அவளை car ஓட்ட பழகச் சொல்லி வற்புறுத்துவேன். அதற்கு ஏதாவது சொல்லி என்னிடமிருந்து நழுவிவிடுவாள்.
நானும் அவளை வற்புறுத்துவதில்லை, காரணம் எனக்கு இன்னொரு நண்பர் இருந்தார்.
தான் car ஓட்ட போவதில்லை என்று அவர் அடம்பிடித்தார். நான் ஏன் என கேட்டதற்கு அவர் சொன்னார், "ஒரு விபத்தில் எக்கச் சக்கமாகச் சிக்கிக் கொண்டேன் மயிரிளையில் உயிர் தப்பினேன், அதுக்கு பிறகு எனக்கு சரியான பயம்" என்றார்.

ஒருவேளை இவளும் ஏதாவது விபத்தில் சிக்கியதால்த்தான் இப்படியோ... என நினைத்து நான் அப்படியே விட்டுவிடுவேன்.

இப்படியே எங்கள் மூவரது நட்பும்; நட்பைத் தொடர்ந்து வந்த ஒரு நெருக்கமான பிணைப்பும் 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்' என்று சொல்வார்களே; அதுபோல வளர்ந்து கொண்டே போனது.

எங்களது நெருக்கம் இன்னும் மிக நெருக்கமாகிக் கொண்டிருந்ததை பார்க்க எவருக்கும் பொறுக்கவில்லை; ஏன் இறைவனுக்கும் கூட பொறுக்கவில்லை...

ஒருநாள் இரவோடிரவாக அவளை வேறொரு நாட்டிற்கு அழைத்துச் சென்று சொந்த்தில் ஒருவனுக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.

அவள் வேறொருவனை திருமணம் செய்து கொண்டதில் எனக்கு எந்த வித கவலையுமில்லை. ஆனால் ஏன் எங்களது நட்பு மறக்கடிக்கப்பட வேண்டும்...? அதுதான் கவலை...!

இன்று அவள் இங்கு இருந்திருந்தால்....
நான் இன்று புகைப்பழக்கத்தை அறவே விட்டிருப்பேன். அதுமட்டுமல்ல நான் இப்போது இருப்பதைப் போல நான்கு மடங்கு பெருத்தவனாகவும் இருப்பேன்.

என்று கண்கள் கலங்கியபடியே கூறி முடித்தார் எனது நண்பர்.
அவர் சொன்னவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் அவரது முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி, சோகம், கண்களில்த் தேங்கி வழிந்த கண்ணீரே போதுமானது. அதில் அந்த நட்பையாவது அவர் மீளப் பெறமுடியாது.

திருமணங்கள் யாரலும் எங்கேயும் நிட்சயிக்கப்படலாம்; ஆனால் நல்ல நண்பர்கள் என்பது கிடைத்தற்கரியது. அந்த நட்பினால் ஏற்படும் அனுபவங்கள் நினைவுகளை மீள மீட்டிப் பார்க்கும்போது ஏற்படுமே ஒருவகை சோகம் கலந்த மகிழ்ச்சி அதுதான் உன்னதமானது...

இன்னும் இதுமாதிரியான சுவையான சம்பவங்களைத் தந்து கொண்டிருப்பேன். தவறாது வந்து பாருங்கள்...