Tuesday, 16 April 2013

உறவைத் தேடி...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 21.04.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

Thursday, 11 April 2013

இதயங்கள்.



இரவெல்லாம் இனிமை ததும்ப,
இதயமிரண்டும் துள்ளியதை,
இன்பத்தே னருந்தியதை 
பகலெல்லாம சொல்லி மகிழ்வது
பகல்க் கனவா...?

வரவெல்லாம் வரவு வைத்து,
வட்டியோடதை மாதங்களில்,
ஏந்தி நிற்கும் கரங்களில்
தருவதெல்லாம்
பகல்க் கனவே அல்ல...!

Monday, 8 April 2013

உன் நினைவுகள்...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 11.05.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...


Monday, 25 February 2013

நாள் பார்த்து, நாள் பார்த்து...

தமிழ்க்கலாச்சாரத்தில் நாள்ப்பார்த்து

வீடு குடிபுகுதல்;
திருமணமுடித்தல்;
என ஒவ்வொன்றுக்கும் நாள்ப்பார்ப்பார்கள்...

சாதாரண விடயங்களும்
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு என இந்த நாட்களில் ஆரம்பிக்கத்- தயங்குவார்கள்...
‘சிகரம்’ என்ற படத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்...
அதில் திரு. S. P. பாலசுப்ரணியம் கதாநாயகனாக நடித்திருந்தார்...

ஒரு முறை அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டி வந்தது. அவர் மனைவி ரேகா  சொன்ன புத்திமதிகளில் முக்கியமானது இது:
8, 17, 26, 35, 44, 53 என இலக்கமிடப்பட்ட இருக்கைளில் அமர வேண்டாம் என்பதே.
நாள், நட்சத்திரம், சகுனம் மட்டுமல்ல இலக்கங்களையும் பார்ப்பார்கள். சிலர் குறிப்பிட்ட திகதிகளில் புதிதாக எதையுமே ஆரம்பிக்க மாட்டார்கள்.

இப்படித்தான் எனது நண்பர் ஆரம்பித்தார் தனது கதையை...

நாள் நட்சத்திரம் பார்க்கலாமா பார்க்கக்கூடாதா என்ற வாதத்திற்கு நான் செல்லப்போவதில்லை! ஏனெனில் இந்த நாள்ப் பார்ப்பது, சகுனம் பார்ப்பது, என்பன இந்த உலகில் எல்லோரிடமும் உள்ளது...

உதாரணமாகக் கூறப்போனால்,
இங்கிலாந்துக்கும் பிராஸுக்கும் இடையே (England and France) சுரங்கப் பாதை(channel tunnel) அமைத்து இரயில் வண்டித் தொடர்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தச் சுரங்கப்பாதை அமைப்பதற்கு சீமேந்தினால் ஆன பெரிய உள்ளடக்கமில்லாத உருளைகளை (hollow cylinders) கடலுக்கு அடியில் கிண்டிய சுரங்கப் பாதையில் பதிக்க வேண்டும். கடல் நீர் உள்ளே வராதவாறு அதை அடைக்க வேண்டும். அதன் பின்னரே இரயில் வண்டித் தொடர்பை ஏற்படுத்தத் தேவையான அனைத்துப் பணிகளும்...

இந்தச் சீமேந்து உருளைகளுக்கு இலக்கமிட்டார்கள். இலக்கமிடுகையில், 13 என்ற எண் வராதவாறு 12A என்றும் 12B என்று இலக்கமிட்டு 14, 15... எனத் தொடர்ந்தனராம். அங்கே 13 என்ற இலக்கம் துரதிஷ்டமானது என எல்லோரும் கருதியதால், அதை தவிர்த்தார்களாம். ஆனால் 12B என்ற அதாவது பதின்மூன்றாவது உருளையை பல சிரமங்களுக்கு மத்தியில்த்தான் கடலுக்கடியில் பதித்தார்களாம்.
PDF முறையில் இந்தச் chennel tunnel இன் விபரங்களுக்கு இங்கே செல்லவும்.

எல்லோருமே இப்படிப் பார்ப்பதுண்டு ஆகவே, நாள்ப் பார்ப்பதை அப்படியே விட்டு விடுவோம்...

நாள்ப் பார்த்து நாள்ப் பார்த்து, நல்லவை தள்ளிப் போகும் போது விளைவுகள் விபரீதமாகிவிடாதா..

நண்பர் கூறுகிறார் நடந்ததைக் கேளுங்கள்...

நான் இலங்கை சென்று வாழ்க்கைக்கு வழி தெரியாத நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயாகியிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தேன்.

நாட்டுக்கு நாடு குடிவரவு குடியகல்வு முறைகளில் இன்னோரன்ன நடைமுறைகள் உள்ளன.

இதனால் உடனேயே நான் திருமணம் முடித்தவளைக் கூட்டி வரமுடியவில்லை. ஆனால் சில மாதங்களில் வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்புடன் நான் வந்துவிட்டேன்.

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, இரண்டு வருடங்களாகியும் எனது துணை வந்தபாடில்லை...

இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு நாள் எதிர்பார்த்திருந்த நற்செய்தி வந்தது. அனுமதி கிடைத்துவிட்டது, அடுத்த கிழமை வருகிறேன் என்ற குறுஞ்செய்தி எனது கைத்தொலை பேசியில் ஒரு கிணு கிணுப்போடு காட்சியளித்தது.

அவளும் வந்துவிட்டாள்.

ஆனால், நாமிருவரும் சேர்ந்து வாழ்வதற்கு சிலர் உடனேயே அனுமதிக்கவில்லை. காரணங்களுக்கு அளவுமில்லை, அதே போல நியாயங்களுமில்லை. ஒரு முக்கிய காரணம், நான் படித்திருக்கிறேனாம்... அவர்களை விட கணனித் தொழில் நுட்பத்தில் சிறந்திருக்கிறேன் என்பது!!!

ஆனால் கடவுப்பத்திரத்தில் ‘விசா’ பதிவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கும் அவள்; அவளது உறவினர் வீட்டிலிருந்து நான் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும். அப்படி பலமுறை நானிருந்த இடத்திற்கு என்னுடன் எனது மோட்டார் வகனத்தில் (car) வந்து உரிய வேலை முடிந்ததும் திரும்பியிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நானே அழைத்துச் சென்று அவளது உறவினர் வீட்டில் விட்டுவிடுவேன்.

அப்படி வரும்போதெல்லாம் எனது வீட்டுக்கு வரும்படி கேட்டால்:
"இண்டைக்கு செவ்வாய்க் கிழமை நான் வரமாட்டன், இண்டைக்கு வியாழக்கிழமை நான் எப்பிடி நான் வாழப்போற வீட்டுக்குள்ள வாறது" என்று கூறி மறுத்துவிடுவாள்.

என்னுடைய ஆபிரிக்க நண்பர்கள்  ‘இது நல்ல செயலல்ல...’ என்று இன்னோரன்ன காரணங்களைக் கூறினர். முக்கியமானது; வேறு யாரும் அவளைத் திருடி விடப் போகிறார்கள் என்பதுதான்.

அப்படியும் ஒரு சம்பவம் 1986ல் நடந்தது...
எனது நண்பர் ஒருவர் இலங்கையிலிருந்து ஒரு பெண்ணை அழைத்தார்.     - அப்போதெல்லாம் பாடசாலை அனுமதி எடுத்தே தமிழர் இங்கே வரவேண்டிய நிலை-.
அவர் அழைத்த பெண்ணை அவரது பெற்றோர்தான் நிட்சயித்திருந்தனர். ஆனால் விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவர் இன்னொருவரை ஏற்பாடு செய்தார். ஏனெனில் நண்பர் இருந்தது வடக்கில் விமான நிலையம் இருப்பது தெற்கில். இடைத்தூரம் ஏறத்தாழ 2000 கிலோமீற்றர்.
விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தவர்; அந்தப் பெண்ணை உரியவரிடம் செல்ல அனுமதிக்கவில்லை. ஓரிரு மாதங்களில் திருமணமும் செய்துகொண்டார் அந்தப் பெண்ணை.

எனது நண்பரோ இன்று வருவாள் நாளை வருவாள் என ‘இலவு காத்த கிளி’ யாக இருந்து விட்டு சோகத்தோடு எங்களிடம் தனது நிலையை விவரித்தார்.

ஆனால் எனது நிலை மிகவும் வித்தியாசம்...

'கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு செல்லும்?' என்று சொல்வதைப் போல நானும் விட்டுவிடுவேன்.

இங்கேதான் நாம் செய்தது பிழை.

ஒருவரும் இந்த நாட்டு விதிமுறையை அறிந்திருக்கவில்லை...


இந்நாட்டுச் சட்டப்படி திருமணம் முடித்த இருவர் ஒன்றாக ஓரே வீட்டில் வாழவில்லை என்றால் அவர்கள் இருவரும் விவாகரத்தின் ஆரம்ப வழியில் பயணிக்கிறார்கள் என அரசு கருதும்.

இது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

//இருபது வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தவர்கள், தமது மகளின் படிப்புக்காக மனைவி ஐம்பது கிலோமீற்றர் தூரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாள். இதையறிந்த அரசு அவர்களை விவாகரத்து எடுக்கும் படி கூறிக் கடிதம் அனுப்பியுள்ளது.//

காவல்த்துறையினர் என்னை அழைத்துக் கேட்டபோது; நான் உண்மையைக் கூறினேன். அவர்கள் அவளுக்கு கடிதம் அனுப்பியபோதுதான் அவளுடைய உறவினரின் செயல்பாடு வெளிவந்தது.

அவளை விவாகரத்துக் கோரும்படி தூண்டினர். தூண்டினர் என்பதிலும் பார்க்க, வற்புறுத்தினர் என்பதே சரியானது.

ஒரு சட்ட ஆலோசகர் மூலம் அவளை விண்ணப்பிக்கவும் செய்தனர் அவளது உறவினர். அரசு எனக்குக் கடிதம் அனுப்பியது ‘விவாகரத்துக்கு உமக்கு விருப்பமா?’ என்ற கேள்வியுடன்.

அவளுக்கு என்னுடன் வாழ விருப்பமில்லை என்றால், நான் வற்புறுத்துவதில் என்ன பயன் என நினைத்து; வந்த அந்தக் கடிதத்திற்கு ‘ஆம்’ என பதிலளித்தேன்.

விவாகரத்தும் வந்து சேர்ந்தது...

இரு வருடங்களுக்கு பின் கட்டிட வரைபு வேலை சம்பந்தமாக என்னை புதிய இடத்திற்கு அனுப்பியது எனது நிறுவனம். அங்கே சிலரைச் சந்திக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு அவளை நன்கு தெரியும். அவர்கள் அவளைப் பற்றிச் சொன்னபோதுதான் அவளுடைய கஷ்ட நிலையை அறிந்தேன்.

அன்று அவள் நாள் பார்த்திரா விட்டால்; இன்று அவளும் நானும் ஒன்றாக வாழ்ந்திருப்போம்...

எனக்கூறி முடித்தார் எனது நண்பர்.

நாள்ப்பார்ப்பது எல்லோரிடமும் உள்ள வழக்கம்; ஆனால் நல்லவற்றை இப்படித் தள்ளிப் போடுவது நல்லதல்ல...

இலையுதிர் காலம்...

இலையுதிர் காலம்...




இந்தக் கவிதையை இசைத்தென்றல் என்ற இணையப் பக்கத்தில் எழுதியிருந்தேன்...

அதை அப்படியே இங்கே உரிய படத்துடன் இணைக்கிறேன்...

Friday, 30 July 2010

மொழியும் நானும் - 2 - கோழி வாங்கப்போனவர்...

ஆங்கிலம் தெரிந்தாலும் சில பொருட்களை இங்கே கொள்வனவு செய்வதென்றால் இந்நாட்டு மொழி; நோர்வேஜிய மொழி சிறிதளவாவது தெரிந்திருக்க வேண்டும்.

நல்லவேளை நோர்வேஜியர்கள் மொழி தெரியதவர் ஒருவர் தவறாக எதுவும்  கூறிவிட்டால் அதை மன்னிப்பது மட்டுமல்ல உடனேயே மறந்தும் விடுவார்கள்.

முதலில் ஒரு தமிழ் பெண் என்ன செய்தாள், என்பதைக் கூறிவிடுகிறேன்.
ஏதோ ஒரு தமிழ்ப்படம் நிறைவுற்ற பின், நன்கு மொழி தெரிந்த பல தமிழ்ப்பெண்கள் கூட்டமாக வெளியே தத்தம் கணவர்மாருக்காக காத்திருந்தனர். கணவர்மார் வாகனத்தரிப்பிடத்திலிருந்து தத்தம் வாகனங்களை எடுத்து வரச் சென்றிருந்தனர்.
இந்த நேரம் ஒரு நோர்வேஜியர் ஒரு வைபவத்தில்க் கலந்துகொள்ள அந்த வழியே வந்தார்.

(அமெரிக்காவில் அல்லது மேலைத்தேச நாடுகளில் அனேகமாக துணையில்லாமல் ஒரு வைபவத்திற்குச் செல்லமாட்டார்கள். இதெற்கென்றே நிறுவனங்கள்கூட உள்ளது. அவரவர் தேவைக்கேற்ப பெண்களையோ அல்லது ஆண்களையோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைக்கும். ஆனால் நிறையவே செலவாகும். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் யாரையாவது கேட்பார்கள். அப்படியும் யாரும் கிடைக்கவில்லையென்றால் மதுபானங்கள் விற்குமிடங்களில் யாரையாவது கேட்பார்கள்.)

அங்கே வந்தவர் அழகழகான பெண்கள்;  சேலை, சுடிதார், சல்வார் கமீ்ஸ் என அழகழகான    இந்திய உடைகளில்     கூட்டமாக நிற்பதைக் கண்டதும், தனது எண்ணத்தை அங்கே நின்ற ஒரு அழகான தமிழ்ப் பெண்ணிடம் தெரிவிக்க அந்தத்தமிழ்ப்பெண் மறுத்ததுமட்டுமல்லாமல் அழத்தொடங்கிவிட்டாராம். அந்த இரவு முழுவதும் அந்தத் தமிழ்ப் பெண் தன் கணவர் நேரத்திற்கு வாகனத்தை கொணர்ந்திருந்தால் அந்த நோர்வேஜியன் அப்படிக் கேட்டிருக்க மாட்டான் எனச் சொல்லி அவளது கணவரையும்   வைது, அழுதுகொண்டிருந்தாராம்.

இனி நான் சொல்ல வந்த நகைச் சுவைச் சம்பவத்தைச் சொல்கிறேன்...

புதிதாக ஒருவர் நோர்வேயிற்கு வந்திருந்தார். அவர் அவரது நண்பரது அறையில் தங்கியிருந்தார்.
ஒருநாள் அவர்கள் கோழிக்கறி சமைக்க முற்பட்டார்கள். அதற்கு கோழி வாங்குவதற்கு அந்தப் புதிதாக வந்த நண்பரை கடைக்குச் செல்லுமாறு சொன்னார். புதிதாக வந்தவருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். ஆகவே அவர் தைரியமாக கடைக்குச் சென்றார்.

இங்கே முட்டைக்கோழி அல்லது இறைச்சிக்கோழியை உயிரோடு வாங்க முடியாது. அப்படி வாங்குவதானால் கோழிப்பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். கோழிகளின் தலைகளை வெட்டி, குடல், சிறகு போன்றவற்றை அகற்றி பொதியில அடைத்து அதி குளிரூட்டியில் வைத்திருப்பார்கள். நாங்கள் அதைச் சிறிது இழக வைத்த பின்  தோலை உரித்து, வெட்டிக் கறி சமைப்போம்.

கடைக்குச் சென்ற புதிதாக வந்த நம் தமிழர், அதி குளிரூட்டியில் கோழியை கண்டெடுக்க முடியவில்லை.
ஆக, அருகில் நின்ற அழகான நோர்வே நாட்டு இளம் பெண்ணிடம் அவரது நண்பர் சொல்லிக் கொடுத்த அதே வசனத்தை அப்படியே ஒப்பித்தார்.
அதை அப்படியே இங்கே எழுதுகிறேன்.

" Jeg vil ha kone..." "kan du hjelpe meg?"

தமிழாக்கம்:

"எனக்கு மனைவி வேண்டும்..." "நீ எனக்கு உதவி செய்வாயா?"

“யெய் வில் ஹா கோனெ...” “கான் டு யெல்ப்ப மெய்?” என்றுதான் அந்தத்தமிழர் கூறினார்.
 
இதை அந்த நோர்வே நாட்டு இளம் பெண் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொண்ட விதம்: “யெய் வில் ஹா கூனெ” என்றே...

அந்த இளம் நோர்வே நாட்டுப் பெண் அதிர்ந்து போய் அந்தத் தமிழரைப்பார்த்து "என்ன" என்றாள்.

அந்தத்தமிழரோ அதே வசனங்களை அப்படியே கூறினார்,  இப்போது அந்த அதி குளிரூட்டியைக் காட்டியபடி.
அந்தப் பெண்ணுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது அது: அந்தத்தமிழர் தன்னைப் பெண் கேட்கவில்லை என்பது.

உடனே கடையில் வேலை செய்வோரிடம் “இவன் ஏதோ கேட்கிறான்” எனக் கூறி கடையில் வேலை செய்பவரிடம் அந்தத்தமிழரை ஒப்படைத்து விட்டாள் அந்த நோர்வே நாட்டு இளம் பெண்.

இதே இடத்தில் ஒரு தமிழ்ப்பெண் என்ன செய்திருப்பாள் என யோசித்துப் பாருங்கள்.

அந்தத்தமிழரோ  அதே வசனங்களை கடையில் வேலை செய்வோரிடமும் ஒப்பித்தார்.
கடையில் வேலை செய்வோர் தலையைச் சொறிந்து கொண்டனர்.

புதிதாக வந்த அந்தத் தமிழருக்கு தான் சொல்வதில் ஏதோ பிழையிருக்கிறது எனப் புரிந்து கொண்டார்.

வேறு வழி என யோசித்த அந்தத்தமிழர், கோழியைப் போல கொக்கரித்து கைகளை மடக்கி கோழி சிறகடிப்பது போல செய்தாராம். அதன் பின்னர்தான் கடையிலிருந்தோருக்கு அந்தத்தமிழர் கோழி வாங்க வந்திருக்கிறார் என்பது ஓரளவிற்கு விளங்கியது.

கோழியை எடுத்துக் கொடுத்து உதவி செய்தனராம்.

கோழிக்கு நோர்வேஜிய மொழியில் 'HØNE' என்பதாகும்.  தமிழில் ஓரளவிற்கு அதை எழுத்தில் ‘ஹோனெ’ என எழுதலாம், ஆனால் அது முழுமையான உச்சரிப்பைத் தராது. ஆங்கில உயிரெழுத்தான ‘O’ வை வெட்டியிருப்பது போல ஒரு உயிரெழுத்துள்ளது. இதன் உச்சரிப்பு: ‘ஓ’ எனச்சொல்லும் போது நாக்கை (சிறிதளவு வெளியே) கீழுதட்டின் உள் விழிம்பில்    வைத்துக் கொண்டால்  எப்படிச்சப்தம் வருமோ அதுதான் அந்த உயிரெழுத்தின்  சப்தமாகும்.

சரி இதற்கும் மனைவிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா...
சொல்கிறேன்.
நோர்வேஜிய மொழியில் 'KONE'  (‘கூனெ’) என்றால் மனைவி என்றர்த்தம்.
ஆங்கில அகரவரிசையில் ‘O’என்பதற்கு நோர்வேஜிய அகரவரிசையின் ஓசை ‘ஊ’ என்பதாகும் ஆனால் எழுத்து மாறாது.

ஆனால் உதரணமாக தமிழ் தெரியாத ஒருவர் ‘தமில்’ என்று சொன்னால் நாம் அதை தமிழ் என திருத்தி விளங்கிக்கொள்வதில்லையா...
அது போலத்தான் கடையிலிருந்தோரும், அந்த இளம்பெண்ணும் ‘கோனெ’ என்றதை ‘கூனெ’ என நினைத்து தலையைச் சொறிந்து கொண்டனர்.
அநேகமான தமிழர்கள், ‘ஹ’ என்பதற்கு பதிலாக ‘க’ என்றே உச்சரிப்பர்.
ஆக, நோர்வேஜிய மொழியை கற்காமல் கடைக்குச் செல்வோருக்கு  இப்படிப்பட்ட சங்கோஜமான, இடர்பாடான நேரங்கள் வரத்தான் செய்யும்...

“காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...” என்றொரு மிக நல்ல பழைய தமிழ்ப்பாடல் உள்ளது...
இவர் கோழி வாங்கப் போய் ஒரு கொடுமையை வாங்கி வரவில்லை.
நோர்வே நாட்டவர்கள் அப்படிப்பட்டவரல்லர்...

ஆங்கிலம் தெரிந்திருந்தும், கோழி வாங்கப் போனவர்; கடையில் பெண் கேட்டாராம் என்றாகிறது.

Saturday, 17 July 2010

மன்றாட்டம்...


தாராயோ தங்க நிறம்
தயவாய்க் கேட்கிறேன்;
சீராகும் என் நிறமும் ஒரு
சிட்டிகை தந்திட்டால்...


எனது தங்க மீன்கள், அவ்வப்போது நிழல்ப்படக்கருவியுடன் நீண்ட நேரம் அவற்றிற்கு முன்னாலிருந்து அவை செய்யும் குறும்புகளையும் அவை தரும் கண்ணுக்குக் கவர்ச்சியான நிலைகளையும் (pose) படமாகப் பிடித்து வைப்பேன். இந்த நிலை அவற்றில் ஒன்று.

இந்த இரண்டு மீன்களுக்குமிடையில் ஏதோ சண்டையோ.. என்னவோ...

ஆனால், அவை நின்ற விதத்தைப் பார்க்கும் போது, எனக்கு வீட்டில் நாங்கள் ஒருவர் பொருளை ஒருவர் எடுத்துப் பாவிப்பதற்கு மன்றாடுவோம், போராடுவோம், தாஜா பண்ணுவோம்... எவ்வளவோ நடக்கும் எங்களது வீட்டில்... 
அது ஞாபகம் வரவே அவற்றின் நிலையை வைத்து இப்படி எழுதினேன்...

சுஜி...

இன்னும் பல எனது தங்க மீன் படங்களின் தொகுப்பு இந்த 'யூற்றியுப்'இலுள்ளது.
இணைப்பை க்ளிக் செய்து பாருங்கள்